தினமணி 11.09.2009
காந்தி மார்க்கெட்டில் ரூ. 3.60 லட்சத்தில் புதிய நவீன கழிப்பறை திறப்பு :
திருச்சி, செப். 10: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ. 3.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நவீன கழிப்பறையை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமை வகித்தார். மாநகர மேயர் எஸ். சுஜாதா, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, 41-வது வார்டு கிருஷ்ணமூர்த்திநகர், 42-வது வார்டு எஸ்எம்இஎஸ்சி காலனி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் நேரு பெற்றார்.
காஜாமலை முஸ்லிம் தெரு பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் ரூ. 2,000 உதவித் தொகை மற்றும் நிவாரண உதவிகளை உடன் வழங்க அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட ஹபிப்புன்னிசாவுக்கு 20,000 ரூபாயை தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கினார் அமைச்சர்.