Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி இயல்புக் கூட்டம்

Print PDF

தினமணி 12.09.2009

மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி இயல்புக் கூட்டம்

சேலம், செப். 11: சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் அங்கீகாரம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள கடைகள், திங்கள்கிழமை அகற்றப்படும் என்று மேயர் ரேகா பிரியதர்ஷிணி தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமை தாங்கினார். ஆணையாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சித் தலைவர் நடேசன் (திமுக) அவசரத் தீர்மானங்கள் வாசித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

நடேசன்:சேலம் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன. மண்டலத் தலைவர்கள் வார்டுகளுக்குச் சென்று பொதுமக்கள் குறை கேட்க 2 ஜீப்புகள் மட்டுமே உள்ளன. அவசரத்துக்கு வாகனம் கிடைப்பதில்லை. ஆனால் அரசு அதிகாரிகள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர். மண்டலக் குழுத் தலைவர்களுக்கு தனித்தனியே வாகனம் வழங்க வேண்டும்.

ஆணையர் பழனிசாமி:அரசு அதிகாரிகள் அவசரமான காரணங்களுக்காகவே வாகனங்களில் சென்றிருப்பார்கள். மண்டலக்குழுத் தலைவர்களுக்கு மேலும் 2 ஜீப்புகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் வெங்கடாஜலம் (அதிமுக):மாநகராட்சி அண்ணா பூங்காவை டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் வரக்கூடிய பூங்காவை வெறும் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் விட்டதில் உள்நோக்கம் உள்ளது. எனவே மறு ஏலம் விட வேண்டும்.

மேயர்:டெண்டரில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. எனவே மறு ஏலம் நடத்த முடியாது.

மேயர் இவ்வாறு கூறியதும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெங்கடாஜலம்:குடிநீர் கட்டணம் செலுத்தாத ஏழைகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

மேயர்ஏழைகளின் இணைப்பு எதுவும் துண்டிக்கப்படவில்லை. ஆண்டுக்கணக்கில் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது.

வெங்கடாஜலம்:புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. இப்பிரச்னையில் மாநகராட்சி சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை.

மேயர்:அனுமதி பெறாத கடைகள் குறித்து மாநகர போலீஸ் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்படும்.

மாரியப்பன் (அதிமுக):மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சரிவர செயல்படுவதில்லை. பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலேயே உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதை ஆதரித்தும், குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளை குறை கூறியும் பல்வேறு கவுன்சிலர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஆணையர்:தனியார் நிறுவனம் எவ்வாறு பணிகளை மேற்கொள்ளுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், சம்பந்தப்பட்ட பகுதி கவுன்சிலர் அடங்கிய குழு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். தவறு இருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.