தினமணி 16.09.2009
நகராட்சி வெளிப்புறப் பணியாளர்க்கு இலவச செல்போன்
திருப்பத்தூர், செப். 15: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திருப்பத்தூர் நகராட்சி வெளிப்புறப் பணியாளர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நகரமன்றத் தலைவர் சொக்கம்மாள் துளசிநாதன் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்எல்ஏ என்.கே.ஆர்.சூரியகுமார், நகராட்சியில் பணிபுரியும் வெளிப்புற பணியாளர்கள் 29 பேருக்கு, அவர்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ளும் வகையில் செல்போன்களை வழங்கினார்.
நகராட்சியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள் 156 பேருக்கு இலவச சீருடை, 75 பேருக்கு மகப்பேறு நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அண்ணாவின் கருத்துகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, நகர மன்றத் துணைத் தலைவர் சாந்தி சங்கர், நகர மன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.