தினகரன் 09.04.2013
மாநகராட்சி சமுதாய கூடங்களில் அமைகிறது 15 மலிவு விலை உணவகங்கள்; மேயர் ஆய்வு
மதுரை: மாநகராட்சி சமுதாய கூடங்களில் 15 மலிவு விலை உணவங்கள் திறக்கப்படுகின்றன. இதில் 8 இடங்களை நேற்று மேயர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
சென்னையில் அரசு மானியத்துடன் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு இட்லி ரூ. 1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவகங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் படிப்படியாக திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதன்படி மதுரையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் (அம்மா உணவகம்) விரைவில் திறக்கப்பட உள்ளன.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 8 இடங்களை மேயர் ராஜன்செல்லப்பா நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அந்த இடங்கள் வருமாறு:-
வடக்கு மண்டலம்: 35வது வார்டு ராமராயர் மண்டபம் அருகிலுள்ள சமுதாய கூடம். 45வது வார்டு புதூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அருகிலுள்ள சமுதாய கூடம். 47வது வார்டு ஜவகர்புரம் மாநகராட்சி சமுதாய கூடம் அருகில். 46வது வார்டு காந்திபுரம் சுகாதாரமையம் அருகில்.
தெற்கு மண்டலம்: 87வது வார்டு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி சமுதாய கூடம். 77வது வார்டு சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி சமுதாய கூடம். 96வது வார்டு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம். 94வது வார்டு அவனியாபுரம் மாநகராட்சி வார்டு ஆபீஸ் அருகில். ஆய்வில் மண்டல தலைவர்கள் ஜெயவேல், சாலைமுத்து, நகர பொறியாளர் மதுரம், உதவி நகர்நல அதிகாரி பிரியாராஜ் பங்கேற்றனர்.
கிழக்கு மண்டலத்தில் 4 இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் 3 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள சமுதாய கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.