தினகரன் 20.04.2013
மாநகராட்சி பல் மருத்துவமனைகளில் சிகிச்சை நேரம் மாற்றம்
சென்னை: ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சியின் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தில் புதிய பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மேயர் துரைசாமி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் பயனடையும் வகையில் மாநகராட்சி சார்பில் புதிதாக 11 பல் மருத்துவமனை திறக்கப்படும் என உத்தரவிட்டார். அதன்படி, பல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அண்ணாநகர், நெற்குன்றம், நங்கநல்லூர், பெசன்ட்நகர், கந்தன்சாவடியில் பல் மருத்துவமனை வரும் 22ம் தேதி திறக்கப்படும்.
வியாசர்பாடி, செம்பியம், அம்பத்தூரில் 23ம் தேதியும், கத்திவாக்கம், மாதவரம் ஆகிய பகுதியில் 25ம் தேதியும் பல் மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன. மாநகராட்சியில் ஏற்கனவே 4 பல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் 4 பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிதாக 26 பல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக பல் மருத்துவமனையின் சிகிச்சை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மண்டல துணை ஆணையர் மகேஸ்வரி, கூடுதல் நல அலுவலர் டாக்டர் தங்கராஜ், தேனாம்பேட்டை மண்டலக்குழு தலைவர் சக்தி, கவுன்சிலர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.