Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி பஸ் நிலையக் கடைகள்: 2ஆவது முறையும் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை

Print PDF
தினமணி       27.04.2013

நகராட்சி பஸ் நிலையக் கடைகள்: 2ஆவது முறையும் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை


ஒட்டன்சத்திரம் நகராட்சிக் கடைகளை 2ஆவது முறையாகவும் ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மீண்டும் ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் 26 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மாத வாடகைக்கு 2010ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக மாத வாடகை ரூ.7500 இருந்து ரூ.24 ஆயிரம் வரை ஏலம் போனது. கடைகளை ஏலம் எடுத்தவர்கள் ஒரு சில மாதங்கள் மட்டுமே கடையை நடத்தினர். அதன் பின்னர் கடைகளை நடத்த

முடியாமல் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 26 கடைகளில் தற்போது 7 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அதே போல உணவு விடுதி மற்றும் கட்டண கழிப்பறை போன்றவற்றையும் ஏலம் எடுத்தவர்கள் அவற்றை நடத்த முடியாமல் நகராட்சியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறுஏலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் உள்ள 19 கடைகள் மற்றும் உணவு விடுதி, கட்டணக் கழிப்பறை ஆகியவற்றை மாத வாடகைக்கு விட ஏலம் விடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன் பேரில் நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. அரசாங்கம் நிர்ணயித்த மாத வாடகை அதிகமாக இருப்பதாகக் கூறி

2ஆவது முறையாகவும் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. எனவே விரைவில் மீண்டும் ஏலம் நடத்தப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.