Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்

Print PDF
தினமலர்        16.05.2013

சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்


சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள, "அம்மா' உணவகங்களில், காலை சிற்றுண்டியாக, இட்லியுடன் பொங்கல், சாம்பார் சேர்க்கப்படுகிறது. சென்னையில் மட்டுமிருந்த இந்த உணவகம், தமிழகத்தில் உள்ள மற்ற, ஒன்பது மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான, அறிவிப்பை, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

வரவேற்பு: உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடந்து, ஓட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலையும் எக்குத்தப்பாக உயர்ந்து வருகிறது. இதனால், அடிமட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

உணவு பொருட்கள் கடும் விலையேற்றத்தால், ஓட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலைகளை குறைக்க, உடனடி நடவடிக்கையை அரசால் எடுக்க முடியவில்லை.

இந்நிலையில், மலிவு விலையில், உணவு வழங்கும் உணவகங்களை, சென்னை மாநகராட்சியில், மண்டலத்துக்கு ஒன்று என, 15 மண்டலங்களில் உணவகங்களைத் திறக்க, நகராட்சி நிர்வாகத் துறை, ஜனவரி, 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

குறைந்த விலையில் அரிசி: கடைகளை அமைக்க, மாநகராட்சி இடம் அளித்தது. கடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த அலுவலகங்களில் தயார் செய்யப்படும் உணவகங்களுக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. இவை தவிர, பருப்பு உள்ளிட்ட பிற பொருட்கள், ரேஷன் கடைகளில் விற்கப்படும் விலையில் அளிக்கப்படுகிறது.

இதனால், காலை நேரத்தில், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம், மூன்று ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் துவங்கப்பட்ட மலிவு விலை உணவகங்களுக்கு, கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளுக்கும், இக்கடைகள் விரிவுபடுத்தப்பட்டன.

கோரிக்கை:

தொழிலாளர்கள் மத்தியிலும், ஏழை, நடுத்தர குடும்பங்களுக்குக்கிடைத்த பயனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும், மலிவு விலை உணவகங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் மலிவு விலை உணவகத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய, ஒன்பது மாநகராட்சிகளில், இம்மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். முதல்கட்டமாக, ஒவ்வொரு மாநகராட்சியிலும், தலா, 10 இடங்களில், மலிவு விலை உணவகங்கள் துவங்கப்படும். இந்த உணவகங்களில், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக பகல், 12:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை, சாம்பார் சாதம், ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம், மூன்று ரூபாய்க்கும் விற்கப்படும்.

பொங்கல், கலவை சாதம்:


சென்னையில் இயங்கும் மலிவு விலை உணவகங்களில், காலை சிற்றுண்டியில் கூடுதல் வகைகளைச் சேர்க்கவும், மதியம், கலவை சாதங்களை வழங்கவும் கோரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், இரவு நேரத்தில், சப்பாத்தி வழங்க வேண்டும் என்றும் கேட்கின்றனர்.

இக்கோரிக்கைகளை ஏற்று, காலை சிற்றுண்டியாக, இட்லியுடன், பொங்கல் - சாம்பார் ஐந்து ரூபாய்க்கும், மதிய உணவில், சாம்பார், தயிர் சாதங்களுடன், எலுமிச்சை அல்லது கருவேப்பில்லை சாதம், ஐந்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

சப்பாத்தி குருமா:

மாலை நேரங்களில், சப்பாத்தி வழங்கப்படும். ஆனால், சப்பாத்தி தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் ஒப்பந்தப் புள்ளி மூலம் கொள்முதல் செய்ய கால அவகாசம் தேவை. எனவே, இரு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா, மூன்று ரூபாய்க்கு, செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.