தினமலர் 22.05.2013
மலிவு விலை உணவுதயாரிக்க பயிற்சி
மலிவு விலை உணவுதயாரிக்க பயிற்சி
![](http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_71862820130522041708.jpg)
திருப்பூர்:""மலிவு விலை உணவு தயாரிப்பது குறித்து மகளிர் குழுவினருக்கு சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்படும்,'' என நகர் நல அலுவலர் செல்வக்குமார் பேசினார்.திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு மலிவு விலை உணவு தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர் நல அலுவலர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.
இட்லி, தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் தயாரிப்பது தொடர்பாக, சமையல் கலை நிபுணர் சிலம்பரசன் விளக்கினார்.நகர் நல அலுவலர் பேசியதாவது: மாநகராட்சியில் 10 இடங்களில், அம்மா உணவகங்கள் அமைய உள்ளன. அவற்றை நடத்தும் பொறுப்பு, மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்கப்படும். அதற்காக, சம்பளம் வழங்கப்படும். அரிசி உள்ளிட்ட அனைத்து சமையல் பொருட்களையும், இதர பாத்திரங்களையும் மாநகராட்சி வழங்கும்.
அம்மா உணவகங்களில், உணவு தயாரிப்பது குறித்து, மகளிர் குழுவினருக்கு சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.உணவு தயாரித்து, அவற்றை டோக்கன் முறையில் விற்பனை செய்வதே குழுவினரின் பணி. ஓட்டல் அல்லது சமையல் அனுபவம் உள்ள குழுவினருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இட்லியும், சாம்பாரும் தலா ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்படும். சப்பாத்தி மற்றும் பொங்கல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. மக்களிடம் கிடைக்கும் வரவேற்புக்கேற்ப, உணவு தயாரிப்பை படிப்படியாக அதிகரிக்கலாம், என்றார்.