தமிழ் முரசு 24.05.2013
மலிவு விலை உணவகங்களில் பரீட்சார்த்த முறையில் பொங்கல் வினியோகம் நாளை லெமன், கருவேப்பிலை சாதம்
சென்னை:மாநகராட்சி மலிவு விலை உணவகத்தில் பரீட்சார்த்த முறையில் இன்று பொங்கல் வழங்கப்பட்டது.
சென்னை
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 மலிவு விலை உணவகங்கள்
தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் காலை 7 முதல் 10 மணி வரை இட்லி
ஒன்று ரூ.1&க்கும், மதிய உணவாக நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை
சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்டு
வருகிறது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து,
மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சத்து 30
ஆயிரம் இட்லியும் 60 ஆயிரம் சாம்பார் சாதம், 35 ஆயிரம் தயிர் சாதம்
விற்பனையாகிறது. சில நேரங்களில் இது அதிகரித்தும் காணப்படுகிறது.
பொதுமக்கள் ஆதரவை தொடர்ந்து, மலிவு விலை உணவகத்தில் காலை சிற்றுண்டியில்
கூடுதலாக பொங்கல் ரூ.5&க்கும், மதிய உணவில் எலுமிச்சை சாதம் அல்லது
கருவேப்பிலை சாதம் ரூ.5&க்கும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
கடந்த 15&ம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து,
மலிவு விலை உணவகத்தில் பொங்கல், எலுமிச்சை, கருவேப்பிலை சாதம்
வழங்குவதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக இறங்கி
உள்ளனர். இதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் கொள்முதல்
செய்யும் பணி முடிந்துள்ளது. வரும் திங்ககிழமை முதல் புதிய மெனு அமலுக்கு
வரும் என்று தெரிகிறது.இந்நிலையில், அனைத்து மலிவு விலை உணவகங்களிலும்
இன்று காலை பரீட்சார்த்த முறையில் பொங்கல் தயாரிக்கப்பட்டது. இதை
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், காலையில்
இட்லி சாப்பிட வந்த அனைவருக்கும் சிறிதளவு பொங்கல் இலவசமாக வழங்கப்பட்டது.
இதேபோல், நாளை அனைத்து உணவகத்திலும் எலுமிச்சை, கருவேப்பிலை சாதம்
பரீட்சார்த்த முறையில் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை நேரத்தில் 2
சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் அல்லது குருமா ரூ.3&க்கு விற்பனை
செய்யும் திட்டம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.