Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக ‘‘அம்மா உணவகம்’’ உணவை சாப்பிட்டு ருசித்த மேயர் சவுண்டப்பன் பேட்டி

Print PDF
தினத்தந்தி       30.05.2013

சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக ‘‘அம்மா உணவகம்’’ உணவை சாப்பிட்டு ருசித்த மேயர் சவுண்டப்பன் பேட்டி


சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக‘‘ அம்மா உணவகம்’’ உள்ளது என்று உணவை சாப்பிட்டு பார்த்த மேயர் சவுண்டப்பன் கூறினார்.

அம்மா உணவகங்கள்

சேலம் மாநகராட்சியில் மலிவு விலையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறந்திட அரசு உத்தரவிட்டு உணவகங்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. ஒவ்வொரு உணவகங்களுக்கும் ரூ.3.70 லட்சம் மதிப்பில் 56 வகையான சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள், நீராவி முறையில் இட்லி தயார் செய்யும் பாத்திரம் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.70 ஆயிரம் மதிப்பில் ஒவ்வொரு உணவகங்களிலும் சூரிய மின்சக்தி கலங்கள் அமைப்பதற்கான கருவிகள் வரப்பெற்றுள்ளன. இவைகள் அமைக்கும் பணி இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கொண்டலாம்பட்டி மண்டலம் கருங்கல்பட்டி, மணியனூர் ஆகிய உணவகங்கள் மற்றும் சூரமங்கலம் மண்டலம் பழைய சூரமங்கலம் சந்தைப்பேட்டை அருகில் மற்றும் சூரமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள வாசவி மகால் அருகில் உள்ள உணவகம் ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியினை மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டனர்.

மேயர்–அதிகாரிகள் ஆய்வு

இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சோதனை அடிப்படையில் தயார் செய்யப்பட்ட சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை சாப்பிட்டு ருசித்து பார்த்தனர். உணவு வகைகள் தரமானதாகவும், சுவை மிக்கதாகவும் இருந்ததாக மேயர் பாராட்டினார்.

இது குறித்து மேயர் சவுண்டப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதிகள் செய்துதர உத்திரவிடப்பட்டுள்ளது. 10 அம்மா உணவகங்களும் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, செயற் பொறியாளர்கள் காமராஜ், அசோகன், மாநகர நல அலுவலர் டாக்டர்.வி.மலர்விழி, மண்டலக்குழுத்தலைவர்கள் தியாகராஜன், சண்முகம், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.