Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் அம்மா உணவகம் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Print PDF
தினமணி        04.06.2013

மதுரையில் அம்மா உணவகம் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?


மதுரையில் துவங்கப்பட்டுள்ள மலிவு விலை உணவு விநியோக அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சென்னையைப் போல, மதுரையிலும் வார்டுகள்தோறும் அம்மா உணவகங்களைத் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விற்பனை அளவையும் அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, மதுரை உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளிலும் பொதுமக்களுக்கு மலிவுவிலையில் உணவு வழங்கும் அம்மா திட்ட உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை துவங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம், பழங்காநத்தம், மேலவாசல், சிஎம்ஆர் சாலை, புது ராமநாதபுரம் சாலை, ராமராயர் மண்டபம், காந்திபுரம், ஆனையூர், ஆரப்பாளையம், கே.புதூர் ஆகிய 10 இடங்களில் இந்த உணவகங்கள் துவங்கப்பட்டன. இங்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் விற்பனை துவங்கியது.

உணவகங்கள் திறப்பதற்கு முன்பே ஏராளமானோர், அங்கு கூடியிருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் இட்லி, சாம்பார் வாங்கி ருசித்தனர்.

சுமார் 1 மணி நேரத்தில் இட்லி விற்று தீர்ந்தது. 300 பேருக்கு மட்டுமே இட்லி தயாரிக்கப்பட்டிருந்ததால், தாமதமாக வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இட்லி, சாம்பார் ருசியாக இருந்ததாகவும், தொடர்ந்து இதே தரத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பகல் 12 மணிக்கு உணவகங்கள் முன் ஏராளமானோர் திரண்டதால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வரிசையில் நின்று சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டனர். 1 மணி நேரத்தில் அவையும் விற்றுத் தீர்ந்ததால் உணவகம் மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஹோட்டல்கள் மட்டுமின்றி, பிளாட்பார உணவகங்களில் கூட இட்லி ரூ. 5 முதல் ரூ.10-க்கும், சாம்பார், தயிர் சாதங்கள் தலா ரூ. 20 முதல் ரூ. 25-க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா உணவகங்களில் இட்லி ரூ. 1-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயிர் சாதம் ரூ. 3-க்கும் விற்கப்படுவதால், வயிறார உணவு கிடைப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.

அதேசமயம், உணவகத்தில் 300 பேருக்கு மட்டுமே உணவுகள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோருக்கு உணவு கிடைக்காத நிலை இருக்கிறது. எனவே, இந்த எண்ணிக்கையை 500 வரை அதிகரிக்க வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை போன்று கூடுதல் உணவு பதார்த்தங்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும், அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உணவகங்கள் கட்டுவதற்கு அரசு நிதி கொடுக்க வேண்டும். எனவே, உணவகங்களை அதிகரிப்பது குறித்து அரசு உத்தரவிட்டால், உடனடியாக தேவைப்படும் உணவகங்களை திறக்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. அதேசமயம், பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து, கூடுதலாக உணவுகளைத் தயாரிக்கவும், உணவுப் பதார்த்தங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்து ஏற்பாடு செய்யப்படும், என்றார்.