தினமணி 04.06.2013
அம்மா உணவகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
வேலூர் மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள் அனைத்திலும் திங்கள்கிழமை கூட்டம் அலைமோதியது.
டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற பலரும், நேரம் செல்லச்செல்ல
முண்டியடித்ததை அடுத்து ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
வேலூர் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள உணவகம் காலை 7 மணிக்கு தொடங்கிய சிறிது நேரத்திலேயே தயாரிக்கப்பட்ட 1,200 இட்லிகளும் விற்றுத் தீர்ந்தன.
தள்ளுமுள்ளு: நண்பகலில் தயிர் சாதம், சாம்பார் சாதம் வாங்க நின்ற கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் டோக்கன் வழங்கும் கவுன்ட்டர் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன.
பாகாயம், காட்பாடி, காந்தி நகர், கஸ்பா, கொசப்பேட்டை ஆகிய இடங்களி உள்ள உணவகங்களிலும் திங்கள்கிழமை தயாரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும், விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டபோது, 10 உணவகங்கள் மூலம் திங்கள்கிழமை 2,700 தயிர் சாதம், 3,500 சாம்பார் சாதம், 14 ஆயிரம் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் நிலையில், அரசிடம் கூடுதல் மூலப்பொருள் ஒதுக்கீடு பெற முயற்சி எடுக்கப்படும்.
சில இடங்களில் இலவசமாக டோக்கன் வழங்கப்பட்டு, உணவு வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய தொகை முழுமையாக இரு நாள்களும் வந்துவிட்டன என்றார்.