Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி               19.06.2013 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில், மக்கள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில், பா.ம.க. மாநகர் மாவட்டச் செயலர் சு. ஹரிகரன் தலைமையில் அக் கட்சியினர் மேயரை சந்தித்து அளித்த மனு:

கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 593 மாணவிகளில் 588 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 11-ம் வகுப்பில் 450 மாணவிகளுக்கு மட்டுமே வகுப்பறை வசதி இருப்பதால் 138 மாணவிகளின் நிலைமை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் பிற உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவிகளும் இப்பள்ளியில் பிளஸ்-1 சேர விண்ணப்பித்துள்ளனர்.

எனவே, இப் பள்ளியில் மேலும்  238 மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்மா உணவகம் தேவை: திருநெல்வேலி டேர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தர்ராஜன், மேயரை சந்தித்து அளித்த மனு:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1500 உள்நோயாளிகள் உள்ளனர். மேலும் 10 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இங்கு சிகிச்சை பெறுபவர்கள் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். எனவே, மருத்துவமனை வளாகத்தில் அம்மா மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

எல்.ஐ.சி. காலனி மற்றும் பி அன்ட் டி காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் செயலர் டி. சாமுவேல் ஐசக் தலைமையில் மேயரிடம் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் குப்பைத் தொட்டிகள், தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.