தினமணி 24.09.2009
பெரியகுளத்தில் கல்லறைகள் அகற்றம்
பெரியகுளம், செப். 23: பெரியகுளத்தில் நகராட்சி மயானத்தில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லறைகள் ஜேஸிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.
பெரியகுளம் வடகரைப் பகுதியில் சுமார் 3 ஏக்கரில் நகராட்சி மயானம் உள்ளது. இங்கு இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கல்லறைகள் அமைத்து வழிபடுகின்றனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன.
எதிர்காலத்தில் புதைப்பதற்கு இடவசதியில்லாத சூழ்நிலை ஏற்படும் என்பதால், கல்லறைகளை அகற்றக்கோரி பல்வேறு சமூகநல அமைப்புகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து கல்லறைகளை அகற்றுவது தொடர்பாக முக்கியப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோருடன் நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இருப்பினும் பொதுசுகாதாரத்தை பேணும் பொருட்டும், மயானத்தை நவீனமயமாக்கும் பொருட்டும், மயானத்தில் உள்ள கல்லறைகள் 5 ஜேஸிபி இயந்திரங்கள் முலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.
நகராட்சி ஆணையர் கே. சரவணக்குமார், தாசில்தார் பி. குமரேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் இப் பணிகளைப் பார்வையிட்டனர்.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு,
பெரியகுளம் டி.எஸ்.பி. ஜெயராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கல்லறைகள் அகற்றப்பட்ட இடத்தை பொதுமக்கள் வசதிக்காக நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.