தினமலர் 27.06.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியில், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., ரெங்கராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் ஜவகர்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாரதி, கவுன்சிலர்கள் செல்ல நாகராஜன், மோகன் உள்ளிட்டோர் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.
நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு கூறியதாவது:
மழை நீரை சேகரித்தால் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம். நீர்வளத்தை அதிகரிக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கலாம். நீரின் தரம் கெடாமல் பாதுகாக்கலாம். இப்பகுதியில், கடல் நீர், குடிநீருடன் கலப்பதை தவிர்க்கலாம். வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தலாம், களிமண் பகுதியில் அமைந்துள்ள கட்டிங்களில் விரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன், மொட்டை மாடியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும், மழைநீர் சேகரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மழைநீர் தொட்டிகளை புனரமைக்கவும், புதுப்பிக்கவும், புதிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பை அமைக்கவும் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இலவசமாக ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.