தினமணி 09.07.2013
வீதி நாடகங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
திருச்சி மாநகரில் ஜூலை 31-ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த வீதி நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சி, திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு தொடங்கியது.
மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி இதைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், கோட்டத் தலைவர் எம். லதா, நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், எக்ஸ்னோரா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர் எக்ஸ்னோரா சார்பில் நடைபெறும் வீதி நாடகங்களில், ஜமால் முகம்மது கல்லூரி மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாநகரம் முழுவதும் இரு குழுக்களாக சுமார் 100 மையங்களில் வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்த நாடகங்கள் நடைபெறவுள்ளன.