தினமணி 25.09.2009
போக்குவரத்து நகரத்தில் தனியார் பங்கேற்புடன் வசதிகள்
புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் லாரிகள் நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள போக்குவரத்து நகரத்தில் தனியார் பங்கேற்புடன் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கூறினார்.
இப் பகுதியை ஆய்வுசெய்த அமைச்சர் நமச்சிவாயம், இது தொடர்பாக கூறியது:
போக்குவரத்து நகரம் 37 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் போதிய வசதி இல்லாத நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இங்கு தங்களால் லாரிகளை நிறுத்த முடியவில்லை என்று அரசை அணுகியுள்ளனர்.
இதையொட்டி இப் பகுதியை ஆய்வு செய்து அந்தச் சங்க நிர்வாகிகளையும் அதிகாரிகளையும் அழைத்துப் பேசினோம். அதன் அடிப்படையில் தனியார் பங்கேற்புடன் கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை இந்த நகரத்தில் செய்ய உள்ளோம்.
லாரிகளுக்கான அலுவலகம், சரக்குகள் வைக்க கிடங்குகள், பஞ்சர் ஒட்டும் கடை, ஒர்க் ஷாப், டிரைவர்கள் தங்குமிடம், ஹோட்டல், டீக்கடை போன்றவை கட்டப்பட வேண்டும்.
மேலும் போலீஸ் பூத் ஒன்று அமைக்க வேண்டும், நடமாடும் போலீஸ் வேன் ஒன்று இந்த நகரத்தில் சுற்றி வர வேண்டும் என்று சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அதை காவல்துறையினர் செய்து கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.
அரசின் பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் இப் பகுதியில் இயங்கும் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
தனியார் பங்கேற்புடன் எந்த மாதிரியான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை திட்டமிட்டு அவற்றை அக்டோபர் 15-ம் தேதிக்குள் தயார் செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.