தினமலர் 01.08.2013
பண்ருட்டி நகரமன்ற கூட்டம்
பண்ருட்டி:கும்பகோணம் சாலையில் உள்ள தடுப்புக் கட்டையை சீரமைக்க வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
பண்ருட்டி நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கமிஷனர் உமா மகேஸ்வரி, துணைச் சேர்மன் மல்லிகா, பொறியாளர் ராதா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
வடிவேலன் (அ.தி.மு.க.,): கும்பகோணம் சாலையில் விபத்து ஏற்பட்ட தடுப்புக் கட்டையை சீரமைக்க வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
ராஜதுரை (அ.தி.மு.க.,): காந்தி ரோட்டில் ரத்தினம் பிள்ளை மார்க்கெட் எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு சைக்கிள் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராமகிருஷ்ணன் (தி.மு.க.,): காந்தி ரோட்டில் உள்ள வியாபாரிகள் கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதிப்பில்லாமல் செய்ய வேண்டும்.
சேர்மன்: மார்க்கெட் எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சர்வேயர் மூலம் அளந்து சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கப்படும்.
கமலக்கண்ணன் (அ.தி.மு.க.,): வடகைலாசம் பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்திராகாந்தி சாலையில் சாக்கடை பள்ளம் முடப்படவில்லை. இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.