Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அண்ணா பூங்கா பராமரிப்பு குத்தகை: ரூ. 64.50 லட்சத்துக்கு ஏலம்

Print PDF

தினமணி           14.08.2013

மாநகராட்சி அண்ணா பூங்கா பராமரிப்பு குத்தகை: ரூ. 64.50 லட்சத்துக்கு ஏலம்

சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பூங்கா பராமரிப்புக்கான குத்தகை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூங்கா பராமரிப்பு அனுமதி ஒப்பந்தம் கடந்த ஆண்டை விட 5 மடங்கு தொகைக்கு ஏலம் போனது.

சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் அருகே உள்ளது. பூங்காவைப் பராமரிப்பதற்கான குத்தகை ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு தனியாருக்கு வழங்கப்படுகிறது.

2013- 2014-ஆம் ஆண்டுக்கான குத்தகை அனுமதிக்கான ஏலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உதவி ஆணையர் (வருவாய்) ராஜா, அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் ப்ரீத்தி ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏலத்தில், மொத்தம் 9 பேர் தலா ரூ. 5 லட்சம் வீதம் முன் பணமாகச் செலுத்தி கலந்து கொண்டனர். ஏலதாரர்களில் ஜெயவேல் அதிகபட்சமாக ரூ. 64.50 லட்சத்துக்கு ஏலம் கோரினார். இதையடுத்து, நிகழ் ஆண்டுக்கான பூங்கா பராமரிப்பு ஒப்பந்த அனுமதி ஜெயவேலுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரூ. 13.99 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. தற்போது பராமரிப்பு ஒப்பந்த அனுமதி கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் உயரும்: அண்ணா பூங்காவைப் பராமரிக்க குத்தகை அனுமதி பெறும் ஒப்பந்ததாரர்கள் பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். தற்போது 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரூ. 5 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவுக்குள் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம், ரயில் பயணம், பலூன் அரங்கு போன்ற குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்களை அதிகபட்சம் 10 நிமிஷங்கள் வரை பயன்படுத்த ரூ. 20 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பூங்கா பராமரிப்பு அனுமதி கடந்த ஆண்டை விட 5 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால், நுழைவுக் கட்டணம், கேளிக்கை பொருள்கள் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, பூங்காவினுள் கட்டணமில்லா குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு இல்லை. மேலும், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. இந்த நிலையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அண்ணா பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை மகிழ்விக்க கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி விளையாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.