தினகரன் 17.08.2013
பேருந்து நிலைய பெயர் மாற்றம் மேயருக்கு காங்கிரஸ் நன்றி
ஈரோடு: ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் பாட்சா மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவத்தை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு பஸ் ஸ்டேண்டில் சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்கனவே இங்கு ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையம் என்று பெயர் பொறித்த நியான் லைட் போர்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த போர்டை அகற்றி விட்டு சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என்று வைக்க வேண்டும் என்று கடந்த 4ம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டது.
எங்களின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாநகராட்சி சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என பெயர் பொறித்த போர்டு வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.