Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறந்த மாநகராட்சியாக தேர்வு ஈரோட்டில் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்

Print PDF

தினகரன்                17.08.2013

சிறந்த மாநகராட்சியாக தேர்வு ஈரோட்டில் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்

ஈரோடு: தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஊழியர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை கோட்டை யில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருது ஈரோடு மாநகராட்சிக்கு கிடைத்தது. சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் 25 லட்சம் ரூபாய்கான காசோலையை மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோரிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சி தேர்வு பெற்றதை அடுத்து நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.  பின்னர் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் கௌரவ தலைவர் ராஜாமணி, பொதுச்செயலாளர் பிரேம்குமார், துணைத்தலைவர் திருமூர்த்தி, பிரசார செயலாளர் பாஸ்கர், அமைப்பு செயலாளர் ஸ்ரீமுத்துசாமி உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: மக்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து சேவை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களின் தேவை அறிந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியை தேர்வு செய்தற்கு மாநகராட்சி சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் காலங்களில் ஈரோடு மாநகரை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல எங்களுக்கு இந்த விருது ஊக்கத்தை கொடுத்துள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து இன்னும் சிறப்பாக பணியாற்றி அடுத்த ஆண்டும் ஈரோடு மாநகராட்சி தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவோம். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.