தினமணி 20.08.2013
போட்டித் தேர்வுகளுக்கான மாநகராட்சியின் இலவச பயிற்சி வகுப்பு
சென்னை மாநகராட்சி சார்பில் கட்டணமில்லாமல் வழங்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை பெற விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வையும், தனியார் மற்றும் அரசு நடத்தும் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளையும் (யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி.) எழுத கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வழங்கப்படும்.
அனைத்து வார்டுகளில் உள்ள இளைஞர்களும் அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் பயிற்சி பெறலாம். இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடக்குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் தபால் மூலம் - வணக்கத்துக்குரிய மேயர் அலுவலகம், ரிப்பன் மாளிகை, சென்னை மாநகராட்சி, சென்னை - 3 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
மேலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.