தினபூமி 30.08.2013
அம்மா உணவகத்தில் அடுத்த மாதம் சப்பாத்தி விற்பனை
சென்னை, ஆக 30 - சென்னை மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. தற்போது காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளை மட்டும் உணவு தயாரித்து விற்கப்படுகிறது. மாலையில் சப்பாத்தி விற்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் சப்பாத்தி, மற்றும் பருப்பு கடைசல் விற்க திட்டமிடப்பட்டது.
சப்பாத்தி அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்பதால் அதற்கான நவீன எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது. மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங்கள், 15 பருப்பு கடைசல் தயாரிப்பு எந்திரங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டது.
செப்டம்பர் 15-ந்தேதி சப்பாத்தி விற்பனையை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டம் பார்ப்பதற்காக ஒரு சப்பாத்தி தயாரிப்பு எந்திரம், ஒரு பருப்பு கடைசல் எந்திரம் உடனடியாக வழங்க ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து விரைவில் நவீன எந்திரங்கள் அம்மா உணவகத்துக்கு வர உள்ளது. அந்த எந்திரத்தை முதல் கட்டமாக கோபாலபுரம் உணவகத்தில் பொறுத்தி சோதனை ஓட்டம் பார்க்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அனைத்து உணவகங்களிலும் அடுத்த மாதம் சப்பாத்தி விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.