Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி           04.10.2013

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஆம்பூர் நகராட்சி மற்றும் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

 ஆம்பூர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள் கொண்ட குழுவினர் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வலியுறுத்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார். ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கத் தலைவர் பிர்தோஸ் கே.அஹமத், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.லாயக் அலிகான், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடர்பு அலுவலர் எல்.சீனிவாசன், துப்புரவு அலுவலர் பாஸ்கர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிப் இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் தொடர்ந்து 4 நாள்களுக்கு 8,9 மற்றும் 28 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய உள்ளனர்.