தினகரன் 29.10.2013
பவானி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை
பவானி, : பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.75 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம், நகர்மன்ற கூட்டரங்கம், தகவல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
ஆணையாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கட்டுமானப் பணிகளை நகராட்சித் தலைவர் கருப்பணன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
பகுதி இரண்டு திட்டத்தின் கீழ் புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்காக, ஏற்கெனவே இருந்த பழைய கட்டடம் ரூ.1.18 லட்சத்தில் ஏலம் விடப்பட்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது 7253 சதுர அடியில் விசாலமாக கட்டப்படும் இந்த புதிய கட்டடப் பணிகள் நிறைவு பெற்றால், குடிநீர் தொட்டிக்கு கீழே செயல்பட்டு வரும் அலுவலங்கள் அனைத்தும் மாறுதல் செய்யப்படும்.
விழாவில், நகராட்சி கவுன்சிலர்கள் முத்துசாமி, ராஜா, முருகேசன், ஆறுமுகம், கவிதா சந்திரன், ஆறுமுகம், சத்தியமூர்த்தி, குருமூர்த்தி, கு.செல்வராஜ், ராஜசேகர், சரவணக்குமார், பட்டம்மாள் கோபால், பத்மாவதி, சீனிவாசன், ஒப்பந்ததாரர் செம்பாக்கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.