Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா உணவகம்' திறப்பு முதல் நாளில், 2,600 பேர் சாப்பிட்டனர்; பிற இடங்களிலும் துவங்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர்           21.11.2013

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா உணவகம்' திறப்பு முதல் நாளில், 2,600 பேர் சாப்பிட்டனர்; பிற இடங்களிலும் துவங்க வலியுறுத்தல்

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை, அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா உணவகம்' நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளில், 2,600 பேர், நீண்ட வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்தனர். மற்ற மருத்துவமனைகளிலும், அம்மா உணவகத்தைத் துவங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், 'அம்மா உணவகம்' திறக்கப்பட்டுள்ளன.

வரவேற்பு

ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதம், ஒரு ரூபாய்க்கு இட்லியும் தரப்படுகிறது. குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோன்று, அரசு மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையேற்ற தமிழக அரசு, 'சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள் உட்பட, ஏழு மருத்துவமனைகளிலும், மாநகராட்சி மூலம், 'அம்மா உணவகம்' திறக்கப்படும்' என, அறிவித்தது.

சாய்வு தளம்

முதற்கட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா உணவகம்' பிரமாண்டமாக, 5,100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 300 பேர் சாப்பிட முடியும்.

மாற்றுத்திறனாளிகள், எளிதாக வந்து செல்லும் வகையில், சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று திறந்து வைத்தார். முதல் நாளான நேற்று, மருத்துவமனைக்கு வந்த மக்கள், நீண்ட வரிசையில் நின்று, உணவுகளை வாங்கி ருசித்தனர். முதல் நாள் என்பதால், கேசரி இலவசமாக தரப்பட்டது.

அதிகாரிகள் கூறியதாவது:

அம்மா உணவகங்களில், தினமும், 1,500 இட்லி; 400 பொங்கல்; 500 சாம்பார் சாதம்; 300 தயிர் சாதம் விற்கப்படுகிறது. அரசு பொது மருத்துவமனையில் நேற்று ஒரு நாளில், 1,519 சாம்பார் சாதமும், 1,085 தயிர் சாதமும் விற்பனையானது.

மொத்தம், 2,600 பேர் வரை சாப்பிட்டுள்ளனர். வரும் நாட்களில், பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

'காலையில் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட இட்லி, இலவசமாக தரப்பட்டது; விற்பனை செய்யப்படவில்லை' என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

உணவை ருசித்த பெண்கள் கூறியதாவது:

குறைந்த விலை என்றாலும், சாப்பாடு நன்றாக உள்ளது. இது, நோயாளிகள், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், ஏழைகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஸ்டான்லி உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனைகளிலும், அம்மா உணவகத்தை திறக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவமனைகளிலும் திறந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.