Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் : முதல்வர் துவக்கினார்

Print PDF

தினமணி          20.11.2013

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் : முதல்வர் துவக்கினார்

சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலமாக, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்வர் உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.