Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரிப்பன் மாளிகை 100வது ஆண்டு விழா ‘நேற்று இன்று நாளை’ குறும்படம் விரைவில் வெளியீடு

Print PDF

தினகரன்             04.12.2013

ரிப்பன் மாளிகை 100வது ஆண்டு விழா ‘நேற்று இன்று நாளை’ குறும்படம் விரைவில் வெளியீடு

சென்னை, : மாநகராட்சி செயல்படும் ரிப்பன் மாளிகைக்கு கடந்த 26ம் தேதியுடன் 100 வயது முடிந்தது. இதையொட்டி ரிப்பன் மாளிகை குறித்த குறும்படம் விரைவில் வெளியிடப்படுகிறது.

ரிப்பன் மாளிகை 1909 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1913 நவம்பர் 26ல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2009 அக்டோபரில் புனரமைப்பு பணி தொடங்கியது. இந்த பணி, 2013 நவம்பர் 26ம் தேதிக்குள் முடிந்து, நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று மேயர் சைதை துரைசாமி 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்.

கடந்த மாதம் 26ம் தேதியுடன் ரிப்பன் மாளிகை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், திட்டமிட்டபடி புனரமைப்பு பணிகள் முடியாததால், விழா கொண்டாடப்படவில்லை. ரிப்பன் மாளிகை 4 ஆண்டுகளில் கட்டி  முடிக்கப்பட்டது. ஆனால், புதுப்பிக்கும் பணி 2009ல் தொடங்கி 4 ஆண்டுகளை தாண்டியும் 50 சதவீதம் கூட முடியவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரிப்பன் மாளிகையின் முழு வரலாறையும் விளக்கும் வகையில், குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்துக்கு ‘நேற்று இன்று நாளை‘ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறும்படத்தை திரையிட அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் வரும் சனிக்கிழமை ரிப்பன் மாளிகையில் குறும்படம் திரையிடப்படும். மேலும், டிவி சேனல்களிலும் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அன்றைய தினம் சிறிய அளவில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.