தினகரன் 19.12.2013
அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்
மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. நேற்று கலெக்டர், மேயர், கமிஷனர், டீன் மற்றும் அதிகாரிகள் இந்த உணவக கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு எதிரே அம்மா உணவக கட்டிடம் கட்டி தயார் நிலையில் உள்ளது. விரைவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறக்க உள்ளார். இதனை கலெக்டர் சுப்ரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, டீன் மோகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சமையலறை, உணவு பரிமாறும் இடம், தண்ணீர் உள்பட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நோயாளிகள் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனை க்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வருகின்றனர். எனவே கூடுதல் நபர்களுக்கு உணவு விநியோகம் செய்ய வேண்டும். சலுகை விலையில் மூன்று வேளையும் உணவு, நோயாளிகளுக்காக பார்சல் என சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இத்துடன் சுத்திகரிக்கப்பட்ட சூடான குடிநீர், மொபைல் போன்களுக்கு மின்சார சார்ஜ் செய்யும் வசதிகள் இங்கு ஒரு பகுதியில் அமைக்க வேண்டும் என்றனர்.