தினமணி 30.12.2013
4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி, சூலக்கல் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் வழங்கினார்.
கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டம் பேரூராட்சி பகுதியில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 3,324 பயனாளிகளுக்கு ரூ. 1.26 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்ஸி,
கிரைண்டர், மின் விசிறிகள், 179 மாணவ மாணவிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான மடிக் கணினிகள், 170 பயனாளிகளுக்கு ரூ. 77 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 3,709 பயனாளிகளுக்கு ரூ. 2.28 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செ.தாமோதரன் வழங்கினார்.
இதேபோல, கிணத்துக்கடவு வட்டம், சூலக்கல் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் 777 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகையாக இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இத்துடன், பொள்ளாச்சி எம்.பி. நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
விழாவில், பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.கே.முத்துக்கருப்பண்ணசாமி, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சித் தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.