தினமணி 30.12.2013
திருவண்ணாமலையில் ஜனவரி 3 முதல் 7 வரை ஆதார் அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம்
திருவண்ணாமலை நகராட்சியில் இரண்டாம் கட்டமாக ஜனவரி 1 முதல் 7 வரை ஆதார் அடையாள அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்கெனவே நடைபெற்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பொதுமக்களின் கைரேகை, விழித்திரை, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யும் முகாம் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 1, 2, 3-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 3 முதல் 7 வரை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது விவரங்களை அளிக்கலாம்.
இதேபோல, 4 மற்றும் 5-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 3 முதல் 7 வரை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், 6 மற்றும் 7-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பே கோபுரத் தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொண்டு தங்களது கைரேகை, விழித்திரை, புகைப்படங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
தேசிய அடையாள அட்டை என்பது எதிர்காலத்தில் மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படும் மிக முக்கியமான அடையாள அட்டை.
எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.