தினமணி 30.12.2013
திருச்சியில் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
திருச்சி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகே சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி வரும் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன.
தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். இதில் ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சுய தொழில் பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான மானியம், கடனுதவி வழங்கும் வங்கிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்களும் ஏராளம் வைக்கப்பட்டிருக்கின்றன. கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
சனிக்கிழமை மாலை இந்தக் கண்காட்சியை மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மேயர் அ. ஜெயா, மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி, மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர்.