தினமணி 04.01.2014
காரமடை பேரூராட்சியில் அம்மா திட்ட முகாம்: 362 பேருக்கு சான்றிதழ்
காரமடை பேரூராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 362 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை சார்பில், காரமடை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமிற்கு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். காரமடை ஒன்றியக் குழுத் தலைவர் ராஜ்குமார், சமூக நலப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் டி.டி.ஆறுமுகசாமி வரவேற்றார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இம்முகாமில், காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டு பகுதி மக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டு, 362 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உரிய ஆய்விற்கு பின்னர் நிலுவையிலுள்ள மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் எனதெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில வேளாண் திட்டக் குழு உறுப்பினர் டி.கே.துரைசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் நிரிஜாமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கந்தசாமி, கண்ணப்பன், முத்துசாமி, ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினம், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை வட்டாட்சியர் ரங்கராஜ் நன்றி கூறினார்.