தினமணி 04.01.2014
மாநகராட்சி அலுவலர்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி
கோவை மாங்கரையில் உள்ள காரல் கியூபல் கல்வி வளர்ச்சி நிறுவனத்தில் மாநகராட்சி அலுவலர்களுக்கான 3 நாள் மனித வள மேம்பாட்டுப் பயிற்சியை மேயர் செ.ம.வேலுசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான பணிகளை மேற்கொண்டு வருவதால் ஏற்படும் மன இறுக்கத்தை போக்குவதற்காக பெங்களுரைச் சேர்ந்த தி டிரெயினிங் பீயூபிள் நிறுவனம் 3 நாள் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தது.
இந்தப் பயிற்சியில் மாநகராட்சி பொறியாளர்கள், படவரைவாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இதுபோன்ற பயிற்சி பெறுவதன் மூலம் பணியாளர்களின் மனநிலை மற்றும் உடல் நிலை புத்துணர்வு பெறுவதுடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முழுக் கவனம் ஏற்படும் என்றும், அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை தொடர்ந்து 100 மாமன்ற உறுப்பினர்களுக்கும் இது போன்ற மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.
பயிற்சியை தி டிரெயினிங் பியூபிள் நிறுவனத்தின் இயக்குநர் எம்.பாரிவள்ளல் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நடத்துகின்றனர். பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம், உதவி ஆணையர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர்கள் ஆறுமுகம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.