தினகரன் 20.01.2014
ஜெயங்கொண்டத்தில் 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி தலைவர் துவக்கிவைத்தார்
ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நகராட்சி தலைவர் மீனாள் சந்திரசேகர் நேற்று துவக்கிவைத்தார்.
போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவளையம், செங்குந்தபுரம், கரடிகுளம், மேலகுடியிருப்பு, கீழக்குடியிருப்பு, வேலாயுதநகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, பாத்திமா பெண்கள் பள்ளி உள்ளிட்ட 25 மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த நகராட்சி தலைவர் மீனாள் சந்திரசேகர், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி இதற்கான விநியோகத்தை முறைப்படி துவக்கிவைத்தார்.
முகாமில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா தலைமையில், டாக்டர் தீபா முன்னிலையில் கிராம சுகாதாரச் செவிலியர் சொட்டு மருந்து வழங்கினர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் நேற்று நடைபெற்ற முகாமில் 2 ஆயிரத்து 815 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை நூற்றுக்கணக்கான செவிலியர்கள் வழங்கினர்.முகாம் ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.