தினமணி 14.01.2014
துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருள்கள்
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்புப் பொருள்களை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் திங்கள்கிழமை வழங்கினார்.
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்தார். ஆணையர் க.லதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, சேலஞ்சர் துரை, எம்.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சியில் பணியாற்றும் 2,909 துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.7.28 லட்சம் மதிப்பிலான பொங்கல் சிறப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.
பொங்கல் சிறப்புப் பொருள்களை வழங்கி, வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியது:
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருள்கள் வழங்குவதுபோல், தமிழகத்தில் முதன் முறையாக மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது என்றார்.
மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 2,909 துப்புரவு பணியாளர்களுக்கும் நடப்பாண்டு முதல் ரூ.7.28 லட்சம் மதிப்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய், பாசி பருப்பு, கரும்பு, மஞ்சள் ஆகியவை ரூ.250 மதிப்பில் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பதற்காக ரூ.14.99 லட்சம் மதிப்பில் 2 சிறப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் அதன் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மாநகராட்சியில் பணியாற்றிய பணியாளர்களின் வாரிசுகள் 200 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இது வரை வேலை நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவில் நேரடி நியமனமாக 22 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், கே.ஆர். ஜெயராம், பி.சாவித்திரி, பி.ராஜ்குமார் எம்.பெருமாள்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.