தினத்தந்தி 27.01.2014
சேலம் மாநகராட்சி பகுதியில் 25,575 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஆணையாளர் அசோகன் தொடங்கி வைத்தார்
சேலம் மாநகராட்சியில் வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மாபேட்டை தேர்வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் கலந்துகொண்டு சேலம் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் புதியதாக சேர்க்கப்பட்ட 25,575 வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும், ‘‘வாக்களிப்பதின் முக்கியத்துவம்’’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை காந்தி மைதானம், பழைய பேருந்து நிலைய வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம், குரங்குச்சாவடி, சூரமங்கலம் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கன்னியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்துக்கு செய்யும் மகத்தான தொண்டு என்ற கருத்துக்களை மையமாக கொண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் தீவிர பிரசாரப் பணிகள் 4 மண்டலங்களிலும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் உதவி ஆணையாளர்கள் கணேசன், பிரித்தி, புஷ்பவதி, ராஜா, உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்ரவர்த்தி, ரவி, தேர்தல் தாசில்தார் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.