தினமணி 26.01.2014
453 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட இடுவம்பாளையம், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவியர் 453 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள், 353 பேருக்கு மிதிவண்டிகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சனிக்கிழமை வழங்கினார்.
இடுவம்பாளையம், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் தலைமை வகித்தார்.
மேயர் அ.விசாலாட்சி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்எல்ஏ பரமசிவம், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 353 மாணவ, மாணவியருக்கு ரூ. 11.56 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், 453 மாணவ, மாணவியருக்கு ரூ. 72.43 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கினார்.
இதில், பல்லடம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தையும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் கரோலின், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம். சண்முகம், துணையாட்சியர்(சிறப்புத் திட்டங்கள்) தர்மராஜ், மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், கூட்டுறவு சங்கத் தலைவர் வி.எம்.கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.