தினமணி 28.01.2014
மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம்
மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆணையர் கிரன்குராலா முகாமை துவக்கி வைத்துப் பேசியது: நகர்ப்புறங்களில் மிகவும் வறுமை நிலையிலுள்ள ஏழைகளின் துயர் துடைக்க 12 ஐந்தாண்டு திட்ட காலத்தில், நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முன்மாதிரியாக இத்திட்டம் மதுரை, ஜெய்ப்பூர் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், சமூக அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம், சுயவேலைவாய்ப்புத் திட்டம், நகர்ப்புற தெருவோர விற்பனையாளர்களுக்கு உதவி செய்யும் திட்டம், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கான தங்கும் விடுதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. நலிந்தோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், சொந்தமாக தொழில் செய்பவர்கள், சுயஉதவிக்குழுக்கள், வீடற்ற ஏழைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கவும், சமூக அமைப்புகள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றுக்கு நிதியுதவி வழங்கி வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்கிறது என்றார்.
முகாமில் நகர்நல அலுவலர் யசோதாமணி, சிப்போ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராஜகோபால், பொதுமேலாளர் பழனிவேல்முருகன், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.