தினமணி 28.01.2014
பெ.நா.பாளையத்தில் சட்ட உதவி மையம் தொடக்கம்
பெரியநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வசதிக்காக, கோயமுத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கென பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் துவாரகநாத் சிங் வரவேற்றார்.
கோவை வழக்குரைஞர் பா.கணேசன், இந்த உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, கோவையிலுள்ள குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான விசாரணை நீதிமன்ற அமர்வு நீதிபதி கே.வி.செந்தூர்பாண்டியன் பேசியது:
பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மையத்தில் சட்டரீதியான உதவிகள் அனைத்தையும் பொதுமக்கள் பெறலாம். வாரம் ஒருமுறை இங்கு ஆணைக் குழுவினர் வந்து மனுக்களை பெறுவர் என்றார்.
பெ.நா.பாளையத்தில் நகைப் பறிப்பு சம்பவங்கள் குறித்து புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸாரிடம் விசாரித்த நீதிபதி, உடனுக்குடன் வழக்குப் பதிவு செய்து ரசீது தர வேண்டும் என உத்தரவிட்டார்.
வாரிசு சான்றிதழுக்காக வருவாய்த் துறையிடம் செல்லும்போது, நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என அலைக்கழிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரன், சட்டப்பணிகள் தன்னார்வலர்கள் ஆர்.அங்குராஜ், வி.விஜயலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் பரமசிவம் நன்றி கூறினார்.