தினமலர் 28.01.2014
நாகர்கோவில் நகராட்சி கூட்டம்
நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி சிறப்பு கூட்டம் நகராட்சி சேர்மன் மீனாவ்தேவ் தலைமையில் நடந்தது. பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுத்திடும் நோக்கத்தில் உச்சநீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசு, அரசு சார்புடைய நிறுவனங்கள், தனியார், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், ஆபத்தான மரங்கள், பழுதடைந்த பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளி மற்றும் அரசு கட்டிடங்கள் குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் குடியரசு தினத்தன்று கிறப்பு கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் நாகர்கோவில் நகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று காலை நகர்மன்ற கூட்டத்தில் நடந்தது. கூட்டத்தில் நகரபகுதியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களை அடையாளம் காணவும், அடையாள சின்னம் குறித்த பலகை இல்லாத ஆபத்தான வளைவுகள் உள்ள சாலைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பற்ற சாலையேரா பள்ளங்களை சரி செய்யவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபத்தான கட்டிடங்கள், மின் கம்பங்களை அகற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இந்த சிறப்பு கூட்டத்தில் துணைத்தலைவர் சைமன்ராஜ், ஆணையர் ராஜன் பொறியாளர் ஜார்ஜ் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.