தினமணி 29.01.2014
மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.கே.ஜெயசேவியர், மேயர் (பொறுப்பு) பூ. ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
மாநகராட்சி 26-வது வார்டு எல்.ஐ.சி. மற்றும் பி அன்ட் டி காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், குடிநீர் இணைப்புகளில் புளோ கண்ட்ரோல் வால்வு திட்டத்தை அமல்படுத்தியும் குடிநீர் விநியோகம் சீராகக் கிடைக்கவில்லை. இப்பகுதியில் தார்ச் சாலைகள் சேதமடைந்துள்ளது. தாமிரபதி காலனி தென்பகுதியில் இருந்து பொதிகை நகர் வரை செல்லும் அரை கி.மீ. மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். பி அன்டி டி காலனியில் மேற்கு எல்லையில் இருந்து பொன்விழா நகர் வரை அரை கி.மீ. தொலைவுள்ள மண் சாலையை சீரமைத்து தார்ச் சாலையாக மாற்ற வேண்டும்.
இப்பகுதியில் கூடுதலாக தெரு விளக்குகள், கூடுதலான குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். இப்பகுதி பெயரை குறிக்கும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 2ஆவது வார்டு புறவழிச்சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும். மாநகராட்சி 33 ஆவது வார்டு ஆசுரா தெருவில் சாலையை முறையாக அளந்து சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர்கள் நாராயண்நாயர், சௌந்தரராஜன், மண்டலத் தலைவர்கள் கே. மாதவராமனுஜம், எஸ்.கே. ஹைதர்அலி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் து. கருப்பசாமி, பெருமாள், பாஸ்கரன், சாந்தி, உதவிப் பொறியாளர் அனிதா, மாமன்ற உறுப்பினர்கள் எம்.கணேஷ், வண்ணை கணேசன், உமாபதிசிவன், முகம்மதுமைதீன், நிலைக்குழுத் தலைவர் டி.எஸ். முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.