தினகரன் 01.02.2014
மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்க ஏபிடிஆர் திட்டம் துவக்கம்
மேலூர், : மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்கும் வகையிலும், பழுது உள்ளிட்ட குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏபிடிஆர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. நகராட்சி மின் இணைப்பின் எல்கை கிழக்கு அரசு கலைக் கல்லூரி, மேற்கு ஆறுகண் பாலம், தெற்கு மில்கேட், வடக்கு நொண்டிக்கோவில்பட்டி வரை விரிந்துள்ளது. மின் உபயோகத்திற்கு பல டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின் இணைப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் மின் உபயோகிப்பாளர் வீடுகளுக்கு சென்று கணக்கொடுத்து அதன் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதில் காலதாமதம் ஏற்படுவதுடன் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஏபிடிஆர் என்ற புதிய முறை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு தெருவிலும் 9.14 அடி உயரம் உள்ள கம்பம் நடப்படுகிறது. அதில் சிறிய ரக டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். அந்த தெருவில் உள்ள மின் இணைப்புகள அனைத்தும் அந்த சிறிய டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்படும். உபயோகிப்பாளர் மின் அளவை அவ்வப்போது மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ‘‘மின் கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று மின் அளவை கணக்கிட்டு வந்தனர். தற்போது நடைமுறைப்படுத்த உள்ள புதிய முறையில் அலுவலகத்தில் இருந்து கொண்டே மின் உபயோகத்தை கணக்கிட முடியும். மேலும், மின் கட்டணம் குறித்து உபயோகிப்பாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மின் சப்ளையில் பழுது ஏற்பட்டால் எந்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.
தற்போது அலுவலகத்தில் இருந்தவாறு கம்ப்யூட்டர் மூலம் எந்த இடத்தில் என்ன பழுது ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டறிந்து சரி செய்ய முடியும். இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றனர்.