தினமணி 01.02.2014
பல்லடம் நகர்மன்றக் கூட்டம்
பல்லடம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.ஏ.சேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, ஆணையாளர் நாராயணன், பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
சின்னசாமி: நகரில் கொசு மருந்து அடிக்காததால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. ஆழ்குழாய்க் கிணறு அமைத்தும் மின் இணைப்புக் கொடுக்காததால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை.
கிருஷ்ணகுமார்: நகரில், அத்திக்கடவு குடிநீர் குறைவாக வருகிறது. நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலைய பகுதியில் இ-டாய்லெட் அமைக்கப்படவில்லை. பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க வேண்டும்.
பொன்னுசாமி: குப்பை கொட்ட இடம் இல்லாமல் துப்புரவுப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
நாராயணன் (ஆணையாளர்): ஆழ்குழாய்க் கிணற்று தண்ணீர் விநியோகம் செய்ய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொசு மருந்து காலை 6 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரையும் அடிக்கப்படும். ஒடையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லடத்தில் எரிவாயு மற்றும் மின் மயானம் அமைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் முதல் 4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இடம் கிடைத்தால் எரிவாயு மயானம் அமைக்கலாம்.
மின்வாரிய உதவிப் பொறியாளர் (நகரம்): 15 நாட்களுக்குள் ஆழ்குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
சேகர் (தலைவர்): பல்லடத்திற்கு வரும் அத்திக்கடவு குடிநீர்க் குழாயில் நீர்க் கசிவால் தண்ணீர் குறைந்துள்ளது. மேலும், இரண்டாவது திட்டத்திற்கு இருகூர் பிரிவு வரை குழாய் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப் பணி 6 மாதத்தில் முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.