Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

Print PDF

தினமணி             01.02.2014

முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

சிதம்பரம் நகர புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து,  நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்தில் புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

  கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:  ஜி.செல்வராஜ் (மூமுக)- ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதை குழாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

 ஆ.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): புதை குழாய் திட்டத்தை காரணம் காட்டி நகராட்சி நிர்வாகம் மக்கள் மீது எந்த வரியையும் சுமத்தக் கூடாது. புதிய இணைப்பிற்கு புதிய வரி விதிப்பு கூடாது. பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தை புதுப்பித்துத் தர வேண்டும். சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.  வக்காரமாரி நீர் தேக்கத்தில் உள்ள குளத்தின் மேற்கு கரையை உயர்த்தி அதிகளவு நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ்: 2014-15 ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. எனவே நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுக்குத் தேவையான பணிகள் குறித்து மார்ச் 3-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

 பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நிற்க முடியவில்லை. மேலும் இலவச கழிப்பறை செயல்பாடின்றி உள்ளது. இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

 தலைவர்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பஸ் நிலையத்தில் புதிய இலவச கழிப்பறை கட்டப்படும்.

 அப்புசந்திரசேகரன் (திமுக): சிதம்பரம் மேலவீதி நீர்த் தேக்க தொட்டி 1915-ம் ஆண்டு திவான் பகதூர் ராமசாமி செட்டியாரால் கட்டப்பட்டது. தற்போது இந்த ஆண்டு நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், ராமசாமி செட்டியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். நகரில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும்.

 கூட்டத்தில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், மேலாளர் ராமஜெயம், மின் கண்காணிப்பாளர் ஷேக்மொகைதீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.