தினமணி 05.02.2014
மாநகராட்சி கண் பரிசோதனை முகாம்: 7-ஆம் தேதி தொடக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம் முகாம் பிப். 7-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வரின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து வார்டுகளிலும் கண்பார்வை குறைபாடு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முகாம்களில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பங்கேற்று, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.
இதன் மூலம் 66 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனையும், தேவைப்படுவோருக்கு விலையில்லா கண் கண்ணாடியும் வழங்கப்படும். மேலும் கண்புரை கண்டறிதல் மற்றும் விழித்திரை நோய் கண்டறிதல் சேவைகளும் அளிக்கப்படும். இந்த முகாமை தியாகராய நகரில் உள்ள ஜீவா பூங்காவில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பிப். 7-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடத்தை அறிய அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளரைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.