தினத்தந்தி 14.02.2014
![சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு](http://mmimages.maalaimalar.com/Articles/2014/Feb/856bca82-b78c-4cb2-860b-20491b57d742_S_secvpf.gif)
சென்னை, பிப். 14 - சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் ‘அம்மா உணவகம்’ செயல்பட்டு வருகிறது.
இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.
6000 சதுர அடியில் மிகப்பெரிய அளவில் இங்கு உணவகம் செயல்பட்டு வருகிறது. நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கு விரும்பி சாப்பிடுகிறார்கள். மிக சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னையில் முக்கியமான 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகம் திறக்க ஏற்பாடு நடந்து வந்தன.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, ராயபுரம் ஆர்.எஸ். ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, எழும்பூர் தாய்– சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் மகப்பேறு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி ஆகிய 6 இடங்களில் அம்மா உணவகம், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன.
நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.முற்றிலும் நீராவியில் இட்லி தயாரிக்க கூடிய வகையில் சமையலறை உருவாகிறது. இருக்கைகள், குடிநீர் வசதி, மின்விசிறி போன்றவை பொறுத்தப்படுகின்றன. இன்னும் 2 வாரத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராகி விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.