Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

‘மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட்’- பாடல் ஆல்பம்: முருகப்பா குழுமம் மற்றும் 'தி இந்து' நாளிதழ் வெளியீடு

Print PDF

 தி இந்து     19.08.2014 

‘மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட்’- பாடல் ஆல்பம்: முருகப்பா குழுமம் மற்றும் 'தி இந்து' நாளிதழ் வெளியீடு

சென்னை மாநகரம் வரும் 22-ம் தேதி தன்னுடைய 375 ஆண்டினை கொண்டாட உள்ளதை முன்னிட்டு ' மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட் ' என்ற பாடல் ஆல்பத்தை முருகப்பா குழுமம் மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகப்பா குழுமம் மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் இணைந்து 'தி மெட்ராஸ் சாங்' என்ற பாடல் ஆல்பத்தை திங்கள்கிழமை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முருகப்பா குழுமத்தின் இயக்குனர் எம்.எம். முருகப்பன், ‘தி இந்து’ நாளிதழ் சார்பாக கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் லோச்சன், ‘தி மெட்ராஸ்’ பாடல் ஆல்பத்தின் இயக்குநர் விஜய் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம். எம். முருகப்பன் பேசுகை யில், '' சென்னை என்பது பல்வேறு தரப்பு மக்கள் வாழும் காஸ்மோ பாலிட்டன் நகரம். நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல சென்னையில்தான் தொடங்கப் பட்டன.

சென்னையின் சிறப்பை விளக்கும் ‘தி மெட்ராஸ் சாங்’ என்ற பாடலுக்காக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன், இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன், கலாஷேத்ரா பரதநாட்டிய மையத்தின் தலைவர் பிரியதர்ஷினி கோவிந்த் உள்ளிட்டோர் ஆல்பத் துக்கு பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி.

கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறுகையில், ‘‘இந்த பாடல் ஆல்பத்தின் மூலமாக மெட்ராஸ் 375 வது ஆண்டை 'தி இந்து' இணைந்து கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த பாடல் மூலம் மெட்ராஸ் நகரின் அற்புதமான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்'' என்றார்.

‘தி மெட்ராஸ் சாங்’ பாடல் ஆல்பம் சுமார் நான்கரை நிமிடங் கள் ஓடுகிறது. பாடலின் வரிகள் 'மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட்' ஆகாமல் உள்ளது என தொடங்குகிறது.

இந்த பாடல் 9 நாட்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பாடலின் கருவாக வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் செல்லும் விமானத்தின் புறப்பாடு நேரம் மாற்றப்படுவதால் சென்னையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டிய சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் அந்த பெண்ணுக்கு சென்னை நகரம் எந்தளவிற்கு பிடித்து போகிறது என்பதை காட்டும் விதமாக பாடல் எடுக்கப்பட்டுள்ளது.

பாடல் வரிகள் இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தும் ஆங்கிலம், தமிழ் கலப்பில் உள்ளது. சென்னை என்றாலே நினைவுக்கு வரும் இடங்களான தி. நகர், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, கோவில், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பாடலின் காட்சிகள் அமைந்துள்ளன.