தினமணி 2.11.2009
சங்கரன்கோவிலில் உள்ளாட்சிகள் தின விழா
சங்கரன்கோவில், நவ. 1: சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பேரணியும் நடைபெற்றது.
நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் துவக்கி வைத்தார்.
பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரதியார் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியை அடைந்தது.
அங்கு உள்ளாட்சி தினவிழாவையொட்டி பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில் கிருஷ்ணசாமிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி க. மகாலட்சுமி முதல் பரிசும், வடக்கு ரதவீதி (கிழக்கு) நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி ஜோதிலட்சுமி 2-வது பரிசும், கலைஞர் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி மு. இன்பரசி 3வது பரிசும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சித் துணைத் தலைவர் சு. சங்கரன், நகராட்சி மேலாளர் அ. மாணிக்கஅரசி, நகராட்சி உறுப்பினர் நடராஜன், கே.எஸ்.கே. சங்கர சுப்பிரமணியன், வனமூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
நகரமைப்பு ஆய்வாளர் பே. முத்துச்சாமி நன்றி கூறினார்.
ஊராட்சி ஒன்றியம்:
இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினவிழா அதன் தலைவர் க .அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வே. செல்வராஜன் முன்னிலை வகித்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகநயினார், ஆசைத்தம்பி, உள்ளாட்சி தணிக்கை ஆய்வாளர் முருகையா உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா வரவேற்றார். அலுவலக உதவியாளர் கணேசன் நன்றி கூறினார்.