தினமணி 2.11.2009
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா
தூத்துக்குடி, நவ. 1: தூத்துக்குடி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றது.
இதையொட்டி மாமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவுக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்ட கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சாக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட வேலைவாய்ப்பு நடுநிலைக்குழு உறுப்பினர் என். பெரியசாமி பங்கேற்று, வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.
மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன், துணை மேயர் சே. தொம்மை சேசுவடியான், பொறியாளர் சொ. அ. ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.